Friday, February 08, 2008

திருவிளையாடல்

1
வளியால்
வெளியில்
ஒளியின் நடனம்

ஒளி ஆடி ஆடி
வியர்க்க
அளியாய் அமுதம்

அளியாம் அமுதால்
மெய்யெங்கும்
ஆனந்தக் களி
2
ஆடாத வெளியில்
ஆட்டுவிக்கும் வளியால்
ஆடும் ஒளி

ஆடாத வெளியும்
ஆட்டுவிக்கும் வளியும்
ஆடும் ஒளியும்
ஒன்று கூட உண்டாகும்
அமுத அளி

அமுத அளி
திரண்டு திடமாக
மெய்யென்னும் ஆனந்தக் களி
3
வெளி யோனியும்
ஒளி லிங்கமும்
கூடி முயங்கிப் புணர
வெளியின் நாதமாய் வளியும்
ஒளியின் விந்துவாய் அளியும்
ஒன்றாகி உண்டாகும்
மெய்யென்னும் ஆனந்தக் களி
4
உச்சி வெளிக்குள் சுடர் விடும்
நெற்றி ஒளியைத் தெற்றெனக் காட்டும்
நாசி வளி

நாசி வளி காட்டும்
நெற்றி ஒளியின் தெளிவால்
நாவிலூறும் அளி

நாவிலூறும் அளியே
திரண்டு திடமாக
மெய்யென்னும் ஆனந்தக் களி
5
சும்மா இருக்கும் வெளியில் ஓடும்வளி
அம்மா தோன்றிற் றோர்ஒளி வளியிடை
வெளியும் ஒளியும் புணர ஞானக்
களிப்பில் பிறக்கும் மெய்யளி
6
வெளிக்குள் ஒளியை வளியால் காணக்
களிக்கும் அளிபெய உன்மெய்

வெளிக்குள் ஒளியை வளியால் காணின்
அளிபெயும் உணர்வில் மெய்க்களி

வெளிக்குள் ஒளியை வளியால் காண்க
அளிபெய உணர்க மெய்க்களி

வெளியுள் ஒளியைத் தெளிவாய்க் கண்டு
வளியால் அதனை உள்வாங்கிக் கொண்டு
அளியாய்ப் பெய்யும் தெள்ளமுதை உண்டு
ஒளிரும் மெய்யுள் இருநீகளி கொண்டு

No comments: