Saturday, February 02, 2008

அருட்குறள்

அருளே எல்லா மாகும் தெளிந்தே
அருளே பொருளாய்ப் போற்று

அருளே மெய்ப்பொருள் மெய்யாம் உடம்புக்கு
அருளே நோய்தீர் மருந்து

அருளே பொருளென அறியா திருக்கும்
மருளை அறுத்தால் சுகம்

அருளொன்றே அரும்பெரும் பரம்பொருள் இம்மெய்த்
தெருளொன்றே தரும்பெருஞ் சுகம்

அருளொன்றே போதுமென்றே நீயிருந்தால் அத்திருஅருளே
பொருளெல்லாம் தருமன்றோ உவந்து

அருளொன்றே பொருளாய்ப் போற்ற உதிக்கும்
தெருளன்றி மருளாம் மனம்

போற்றுக அருளைப் பொருளாய்ப் போற்றப்
போற்றப் பெருகுந் திரு

பிறந்திறந்தே யுழலும் பொய்வழக் கொழியவென்றும்
அறந்தலையாய்க் கொள்க அருள்

மரணப் பெரும்பிணி வாரா வகைக்கே
வரமாய் வருவதே அருள்

அருளொன்றே அரும்பெறற் பெரும்பொருள் நின்மனத்திலித்
தெருளின்றேல் மருண்மலச் சழக்கே

அருளைப் போற்றி அமுதுண்டு நின்றால்மெய்ப்
பொருளாய் ஓங்கு முடம்பு

அருளே பொருளெனப் போற்றுந் தெருளால்
திருவே பெருகும் விரைந்து

எல்லாப் பொருளும் பொருளல்ல ஞானியர்க்கு
மெய்யாம் அருளே பொருள்

திருவைத் தேடிஓயா தோடும் உலகில்
அருளைக் காணஆகுந் திரு

நான்பொருளாய்க் கண்டதெல்லாம் அருளே அதுவே
வான்பொருளாய்க் கண்டத்துள் விழும்

அருளாம் தெருளே பொருளாம் மற்றெல்லாம்
இருளாம் மருளே தேர்

குருவருள் பெற்று குவலயத்து நின்றால்
திருஅருள் தேடி வரும்

அரும்பொருளாம் அருளைப் பெற்றடங்கி நிற்க
பெருஞ்சுகமாம் பேரின்ப வாழ்வு

தேடுக அருளை மரணப் பிணிதீர்க்கும்
மருந்த தனிற்சிறந் ததில்

அன்பருள் எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
வன்பிருள் இலாத செயல்

கொல்லாமல் உயிரோம்பும் அருள்நோக்கம் கொண்டு
எல்லார்க்கும் அன்புசெயல் அறம்

அன்பே ஆற்றலாய் அறிவினூடே வெளிப்படும்
இன்பே ஊற்றதாம் பெருக்கு

அன்பெனும் அருள்நிலையே அறிவிடத்து விளங்கும்
இன்பெனும் தெருள்நிலையே வீடு

அன்பும் அருளும் இருகண்ணாய்க் கொண்டு
இன்பும் பொருளும் காண்

அன்பும் அருளும் இருகரமாய்க் கொண்டு
இன்பும் பொருளும் அளி

அன்பும் அருளும் அறிவில் விளங்கின்
இன்பும் பொருளும் உறுதி

அருளொன்றே மரணத்தை வெல்லு முபாயமித்
தெருளின்றேல் மரணமே வாழ்வு

கருணையில் உயிர்களைக் கனிவுடன் காக்கும்
அருளாற்றல் அன்றோ இறை

பெருங்கருணை உளங்கொண்டு உயிர்நலம் பேணும்
அருட்செயலே தலையாய அறம்

பொருளல்லவரை அரும்பொரு ளாகச் செய்யும்
அருளல்லது இல்லை பொருள்

பொய்யரைத் திருத்தி நல்வழி நிறுத்தி
மெய்யராய்ச் செய்யும் அருள்

இறவா வாழ்வெனும் பெருவரத்தோடு மேலும்
பிறவா நிலைதரும் அருள்

அருளன்றிப் பொருளொன் றில்லை அருளே
பொருளென்று போற்றி நில்

No comments: