Saturday, February 02, 2008

ஓர் அதிசயப் பிரமாணப் பத்திரம்

பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் அருட்தந்தையே!
நீவிர் என் மூச்சாகி என்னை உயிர்ப்பிக்கிறீர்.

ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, ரூ என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் அருட்தாயே!
நீவிர் என் உடம்பாகி என்னை உறுதிப்படுத்துகிறீர்.

சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் ஞானக் கொழுந்தே!
நீவிர் என் மனமாகி என்னை உணரச் செய்கிறீர்.

இம்மூவரும் ஒன்றிய திரித்துவ ஒருமையாய் விளங்கும்
அருட்பெருங்கடவுளே!
நீவிர் நித்திய ஜீவனாகி என்னை நிலைபெறச் செய்கிறீர்.
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் "நான்" எனும்
ஆன்ம விளக்கப் பெரும்பொருளாய் உறைகின்றீர்.
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் "நானே" எனும்
ஒருமைப் பெருநிலையாய் இருக்கின்றீர்.

இப்பேருண்மைகளை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன்.
ஒப்புதல் பிரமாணமாக இப்பத்திரத்தில் கையெழுத்திட்டு
இதோ இங்கேயே இப்போதே
எல்லா நோய்களிலிருந்தும்
எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும்
எல்லாத் தளைகளிலிருந்தும்
என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன்.
பரிபூரண ஆரோக்கியமும்
பூரண சுதந்திரமும்
அருட்பெருங்கடவுளின் அனைத்து நலங்களும்
என் பிறப்புரிமையென்று முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
அருட்பெருங்கடவுளின் அதிசய சாம்ராஜ்ஜியத்தை
என் வாழ்க்கையிலும் அன்னை பூமியிலும் உறுதிப்படுத்துகிறேன்.

ஓம். ஆமேன். ஆமீன்.

No comments: