Thursday, June 26, 2008
இருதயங் கனிந்தால்...
இதயம் மெய்க்குள்
கற்கண்டாய் இனிக்கும்
மூளையின் மடல்களில்
ஊறும் அமுதால்
வரண்ட நா
தித்திப்பால் நனையும்
சத்திப் பால்
தொண்டைக்குள் இறங்க
தாகமெல்லாந் தணியும்
உடற்றும்
வயிற்றுப் பசி தீரும்
கொடுங்காமக் கனல் உருக
ஆருயிர்
அருங்காதல் வழிப்படும்
அருட்கனலின் கதகதப்பில்
மெய்யெலாங் குளிரும்
பொய்ச் சாக்காடு தொலைந்து
மெய் மெய்யாய்த் துலங்கும்
இருதயங் கனியுமா?
வள்ளலே!
நீரே கதியென்று
உம்மைச் சரண் புகுந்தேன்
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல் நீர்
என் இருதயங் கனிய வைக்குந்
தந்திரஞ் செய்ய அறியீரோ!
வெள்ளை மன வள்ளல் நீர்
கள்ள மனக் குள்ளன் எனைக்
கடைத்தேற்ற அறியீரோ!
"இரு தயவாய்!"
என்று
என் இருதய வாய் திறக்கும்
திருமந்திரஞ் சொன்னீர்!
வள்ளலே!
அன்பின் விதை தூவி
வன்பின் பாலையாம் என்னை
அருட்சோலையாக்கும்
உம் திருச்சித்தம்
சிரமேற்கொண்டு
காத்திருக்கிறேன்
இருதயங் கனியுங் கணம்
வாய்க்காமலா போகும்!
பெருந்தயவாய் இருக்கும்
அருட்செம்மல்
உம் திருச்சித்தம்
நிறைவேறாமலா போகும்!
சவமாய்க் குழிக்குள் வீழுமுன்
என் அவமெலாம் நீக்கி
நற்றவ நெறியில்
என்னை நிறுத்தி
என் இருதயங் கனிய வைக்க
வள்ளல் உம் ஒருவரால் தான் முடியும்!
எனவே
நீரே கதியென்று
உம்மையே சரண் புகுந்தேன்
உம் வெள்ளங்கியுள்
என் கள்ள மனம் அடங்கக்
காத்திருக்கிறேன்
ஐயனே!
என்னை ஆட்கொண்டருள்வீர்
இக்கணமே!
சவக்குழி என்னை விழுங்கு முன்னே
அருட்கனலாம் நீர்
என்னை விழுங்குவிரே!
என் இருதயங் கனிய வைப்பீரே!
Tuesday, April 15, 2008
வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 2
இருக்கிறேன் என்ற அந்தமாய் முடியும்
அருட்குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றுள்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை அடக்கம்.
இம்மருட்பொய்யுலகில்
என் அருண்மெய் விளங்க
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையின்
திட வடிவமாக
உன்னை நிறுத்தி
உன் உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை
நானே
எழுந்தருளியிருக்கிறேன்.
எனவே
என் அன்பு மகனே(ளே)!
எதற்கும்
நீ
கலங்க வேண்டாம்.
"எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்"
என்ற
சுடச் சுடச் சுடரும் வார்த்தைகளால்
உன்னை அறைந்து
உன் இருதய வாய் திறந்து
ஆதி
அந்தமாம்
என் மந்திரத் திரு உருவில்
உன்னை
நிற்க வைத்து
உன் நடுவே
"இரு தயவாய்"
என்ற பேருபதேசம் முழங்கி
அதன் பொருள் விளங்கி
உலக உயிர்த்திரள் அனைத்தும்
நித்தியப் பெருவாழ்வில் உய்யும்
மெய்வழி காட்டி
உன் தாள்களின் தூசுகளில்
என் தாள்களின் தூசுகள் படிய
உன்னோடு வேறற ஒன்றி
நிற்கிறேன்
நான்.
நீ
என் மந்திரத் திரு உருவிலும்
நான்
உன் மெய்யுடம்பாலயத்திலும்
வேறற ஒன்றி
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நிற்பதால்
இஞ்ஞான யுகத்தில்
அஞ்ஞான மாயையின்
பொய்யான பேயாட்டம் முடிந்து
என் மெய்ஞ்ஞானத் திருக்கூத்து தொடங்கும்.
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை வெல்லும்.
அதன்
திட வடிவமாம்
நீ
நித்தியப் பெருவாழ்வில்
நிலைபெறுவாய்.
இது சத்தியம்.
திருஅருட்பிரகாச வள்ளலாரென்ற
உன் அம்மையப்பனாம்
அருட்பெருங்கடவுள்
நான்
ஆணையிட்டுக் கூறுகின்றேன்.
இது சத்தியம். இது சத்தியம். இது சத்தியம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி -1
பிணமென்றே ஊர் சொல்லப்
பொய்யாக்கும் மரணம்
மண்ணிலிட்டோ தீயில் சுட்டோ
நசிகின்ற சடலந்தான்
உடம்பென்றால்
மெய்யென்ற பேர் ஏனோ!
மரணத்தைப் பொய்யாக்கி
உடம்பைப் பேருக்கேற்றபடி
மெய்யென்ற பொருளாக்கி
உய்யும் வழி சொல்லும்
உயிர்ப்புள்ள மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
"என் ஏழாந் திருமறை இது"
என்றே எனக்களித்த
வள்ளலே!
திருஅருட் பிரகாசரே!
சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கும்
உம் ஏழாந் திருமறை வெல்லுமா?
அல்லது
மரணப் பேய்
என் உடம்பை விழுங்குமா?
அன்பு மகனே!
ஐயம் வேண்டாம்
என் ஏழாந் திருமறை
நிச்சயம் வெல்லும்.
பத்தும் ஒரு மூன்றாம்
அருட்குரு மந்திர தாரணையில்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நில்.
உன் "இருதய வாய்" திறக்கும்.
"இரு தயவாய்"
என்ற என் பேருபதேசப்
பொருள் விளங்கும்.
ஐயனே!
ஏதுமிலா ஏழையெனை
சூதுமனக் கபடனெனை
நெஞ்சில் ஈரமிலா
வஞ்சக வன்பனெனை
அறிவிலா எத்தனெனை
மறை கழன்ற பித்தனெனை
ஜீவனுள்ள
உம் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கப் பணிக்கும்
உம் சித்தம்
எனக்கு
ஒரு சிறிதும் விளங்கவில்லை.
இருந்தாலும்
அவ்வாறு நிற்பது நீரே
என்ற உறுதியுடன்
உம் வெள்ளங்கியுள்
கருத்த என் மனமடங்கி
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கிறேன்.
அன்பு மகனே!
அருட்பெருஞ் செல்வனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
சுந்தர இருதயத் தூய சித்தனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
தனிப்பெருங் கருணையனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
அருட்பெருஞ் ஜோதியனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நாயகனாம் வாலறிவனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
மெய்ஞ்ஞானத் திருமறையோனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நீ மட்டுமன்றி
எங்கும் எதிலும் எப்போதும்
பரந்து விரிந்திருக்கும்
என் வெள்ளங்கியுள்
கருத்த தம் மனமடங்கி
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்க முனையும்
என் அன்பு மகன்(ள்) ஒவ்வொருவரும்
இன்று முதல்
அருட்பெருஞ் செல்வரே!
சுந்தர இருதயத் தூய சித்தரே!
தனிப்பெருங் கருணையரே!
அருட்பெருஞ் ஜோதியரே!
நாயகனாம் வாலறிவரே!
மெய்ஞ்ஞானத் திருமறையோரே!
உண்மையிது
வெறும் புகழ்ச்சியில்லை
ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்!
உன் உள் மெய்யாம் உண்மையாய் உறையும்
உன் உள் மையாம் வெண்மையாய் ஒளிரும்
என் அருளொளியின்
உண்மையிது!
சத்துணவாய் ஏற்று
உண் மை இதை
இன்றே
இப்போதே!
"வள்ளலே!
உன் வள்ளன்மைக்கு
உண்டோ ஈடு!"
என்ற உன் தந்திர வாக்கை
இன்று பலிக்க வைத்தேன்
உன் அம்மையப்பனாம்
நானே!
Wednesday, April 09, 2008
மருட்டும் இரவில்
மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்
பொய்யுறவுகளை உதறி விட்டு
அருட்பெருங்கடவுளின் மெய்யுறவில்
மனம் லயிக்க
களிக்கிறது இருதயம்
கனவுகளனைத்தும் கலைந்து
திறக்கிறது என் ஞான விழி.
நினைவுகள் கழன்று
இருப்பில் கரைகின்றன கணங்கள்
ரணங்களைக் குணப்படுத்தும்
ஆன்ம ஒளி
என் விழிகளில் வீசுகிறது.
இருதயக் களிப்பு
காயங்களை ஆற்றும் களிம்பாய்
என் விரல்களில் வழிகிறது
சிதையில் எரிகிறது மரணம்.
நிதர்சனமாய்த் தெரிகிறது
நித்தியப் பெருவாழ்வு
பற்றுகளனைத்தும்
பற்றற விட்டு
வள்ளலைப் பற்றியதால்
ஒருமைப் பெருநிலையில்
ஓங்கி நிற்கிறேன்
நான்
அருட்பையின் காலியான அகண்ட வெளியில்
உலக உயிர்த்திரள் பத்திரமாய்
மனப் போர்வைகள் களைந்த
இருதயம்
பொய்ம்முகங்களைக் களைந்த
மெய்யகம்
அமுதப் புன்னகை
துகளளவும் துரிசற்ற தூய நோக்கு
அகண்டவெளி தேசத்தில்
அருளொளியாய் விழித்திருக்கிறேன்
நான்
வள்ளலோடு ஓன்றிய
என் நித்தியப் பயணத்தில்
ஒவ்வொரு கணமும்
ஒப்பிலா அற்புதம்
அருட்பெருங்கடவுளின் செல்லக்கொழுந்துகளாம்
உலக உயிர்த்திரளில் ஒன்றாய்
நானும்
மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்
தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவ்ர்களின் “இந்த மெல்லிய இரவில்“ என்ற கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை இது.
Wednesday, March 05, 2008
அருட்குறள் சுட்டும் மெய்ஞ்ஞான விஞ்ஞானம்
அசையத் தோன்றும்
அருளொளி
பாயும் அருளொளிப்
பாய்ச்சல் குறையத் தோன்றும்
பருவெளி
பருவெளி உறையப்
பளிச்செனத் தோன்றும்
வெள்ளொளி
பாயும் வெள்ளொளிப்
பாய்ச்சல் குறையத் தோன்றும்
பொருட்திரள்
(வெறுவெளி=வெட்டவெளி, சுத்தவெளி, பரமாகாசம், தனிப்பெருங்கருணை, Spiritual Space
அருளொளி=அருள்வெளி, ஜோதி வெளி, சிதாகாசம், அருட்பெருஞ்ஜோதி, Spiritual Light whose speed is Infinity
பருவெளி=பூதாகாசம், விண், Material Space
வெள்ளொளி=Material White Light whose speed is 3,00,000kilometres/second
பொருட்திரள்=Matter)
வெறுவெளிக்குள் அருளொளி அடக்கம்
அருளொளிக்குள் பருவெளி அடக்கம்
பருவெளிக்குள் வெள்ளொளி அடக்கம்
வெள்ளொளிக்குள் பொருட்திரள் அடக்கம்
எனவே
வெறுவெளிக்குள்
அருளொளியும்
பருவெளியும்
வெள்ளொளியும்
பொருட்திரளும்
ஆகிய எல்லாமே அடக்கம்
பொருட்திரள் வேகங்கூடப்
பாயும் வெள்ளொளி
வெள்ளொளி உருகிச்
சேரும் பருவெளி
பருவெளி வேகங்கூடப்
பாயும் அருளொளி
அருளொளி அசைவு நிற்க
அசையா வெறுவெளி
காலியான வெறுவெளியின்
திடப்படுதல் பொருட்திரள்
திடமான பொருட்திரளின்
காலியாதல் வெறுவெளி
மனிதனுக்குத்
தன் திடமான வெளி பாகமாம்
பொருளே மெய்
காலியான் உள் பாகமாம்
வெறுவெளியே
அருளொளியாம் ஜீவன்(உயிர்)
பாயும் வழி
(நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
குருநாதர் இயேசு கிறிஸ்துவின் மகாவாக்கியம்)
மனிதனுக்கு
மெய்யென்னும் திடப்பொருள்
தன்னுள் வழியாய் இருக்கும்
வெறுவெளியினூடே
அருளொளியாம்
ஜீவனின் பாய்ச்சலை
தங்கு தடையின்றி
அனுமதிக்கவே இருக்கிறது
இவ்வாறு மனிதன்
தன் மெய்யென்னும் திடப்பொருள்
அருளொளி பாயும் ஊடகமே என்று
தான் அறிந்துணர
பாயும் அருளொளியில்
தன் மெய் கரைய
வெறுவெளியில் ஒன்றுவான்.
பொருள் வெள்ளொளியிலிருந்தே
உருவாகிறது
வெள்ளொளி பருவெளியிலும்
பருவெளி அருளொளியிலும்
அடங்கியிருப்பதால்
பொருளுக்கு அருளொளியே மூலம்
அருளொளிக்கு வெறுவெளியே மூலம்
பொருளுக்கும் அருளொளிக்கும் இடையே
பருவெளியில் படர்ந்திருக்கும் மாயையே
பொருளுக்கு அருளொளியே மூலம்
என்ற பேருண்மையை
மனிதனிடமிருந்து மறைக்கிறது
பொருளுலகில் வாழும்
மனிதனால் தன்னிலையில்
இம்மாயையைத் தகர்க்க முடியாது
அருளொளியொன்றே
இம்மாயையைத் தகர்க்கும் ஒரே வழி
பருவெளியில் படர்ந்திருக்கும்
இம்மாயையைத் தகர்த்து
பொருளுக்கு அருளொளியே மூலம்
என்ற பேருண்மையை
அருளொளி மனிதனுக்கு உணர்விப்பதே
மெய்ஞ்ஞானம்
பருவெளியில் மாயை கலைய
மனிதனின்
மெய்யாம் திடப்பொருளுக்காகும்
அருளொளியின் சுத்தம்
மாயை கலையாமல்
மனிதனின்
மெய்யாம் திடப்பொருள்
அருளொளியில் கரைய முடியாது
மாயை கலைந்து
அருளொளியின் சுத்தம்
கிடைக்கப்பெற்ற
மனிதனின்
மெய்யாம் திடப்பொருள்
அருளொளியில் தான் கரைய
மனிதன் வெறுவெளியில் ஒன்றுவதே
மரணமிலாப் பெருவாழ்வு
இம்மாயையின் தோற்றம்
வெறுவெளியிலோ
அருளொளியிலோ
அல்ல
ஒன்றோடொன்று அம்மையப்பனாய்
எப்போதும் புணர்ந்திருக்கும்
இவ்வொருமையை
மாயையையின் ஒரு சிறு கூறு கூட
தீண்டவே முடியாது
பருவெளியில் அஞ்ஞான இருளாக
இம்மாயை எப்படிப் படர்கிறது?
இச்சதிக்குப் பின்னிருக்கும்
மர்மம் என்ன?
அருளொளி
இம்மாயைத் திரையைக் கிழித்து
பொருளுலகில் வாழும்
மனிதனுக்கு
மெய்ஞ்ஞானம் அளிக்க
ஏன் விரைகிறது?
அடுத்து ஆராய்வோம்.
அருளொளியை விட்டு விலகிய
ஒரு அஞ்ஞானக் கூட்டம்
பருவெளி மற்றும் பொருட்திரள் நிலையிலேயே
தம் வாழ்வை நீட்டிக்கொள்ள வேண்டும்
என்ற தம் அஞ்ஞானத்தால் உருவாகிய
கட்டாயத்தில் இருப்பதால்
பொருளுலகில் வாழும் உயிர்த்திரளின்
குறிப்பாக மனிதனின்
உயிர்ச்சக்தியைக் கரந்து
தம் வாழ்வை நீட்டிக் கொள்ளவே
இம்மாயையைப்
பருவெளியில் படரவிட்டிருக்கிறது.
மனிதன் அஞ்ஞானத்தில் இருக்கும் வரையே
இக்கூட்டத்தால்
தம் வாழ்வை நீட்டிக் கொள்ள முடியும்.
ஆறறிவுள்ள மனிதனை
இம்மாயையின் பிடியில் சிக்க வைத்து
பொருட்திரளையும்
ஒன்று முதல் ஐந்து வரையிலான
உயிர்த்திரளையும்
பரிணமிக்க இயலாத இருளில்
ஆழ்த்தி இருக்கிறது இக்கூட்டம்.
அன்பெனும் உயிர்நிலையை
அறிய முடியாத
இருதயமில்லாத
ஆனால் மிகவும் தந்திர புத்தி கூர்மையும்
ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது போன்ற
தொழில்நுட்பங்களில் தேர்ந்த இக்கூட்டம்
மனிதரை வன்பில் ஆழ்த்தி
அவர்களது குரூரச் செயல்களின் மூலம்
கசியும் குறைந்த அதிர்வுகளுள்ள
உயிர்ச்சக்தியை உண்டே
தம் வாழ்வை நீட்டிக் கொண்டிருக்கிறது.
அன்பின் உச்ச அதிர்வுகளை
இக்கூட்டத்தால் தாங்கிக் கொள்ள முடியாது
ஏனென்றால்
அவ்வுச்ச அதிர்வுகள் சுட்டும்
அருளொளியை வெறுத்தும் மறுத்தும்
அதை விட்டு விலகி வந்திருக்கும்
இக்கூட்டம்
ஆணவத்தின் முழு வடிவம்.
இக்கூட்டம் படர விட்டிருக்கும்
மாயையெனும் அஞ்ஞான இருளிலிருந்து
பொருளுலகில் வாழும்
மனிதனையும்
அதனால் மற்றெல்லா உயிர்த்திரளையும்
பொருட்திரளையும்
அருளொளி விடுவிப்பதன் மூலம்
அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருக்கும்
ஆணவத்தின் முழு வடிவமாம் இக்கூட்டம்
தம் வாழ்வை நீட்டிக்க
வேறு வழிகளைத் தேட வேண்டிய
கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு
முடிவில்
வேறு வழியின்றி
ஆணவத்தை விட்டு
அருளொளிக்குத் திரும்பும்
நல்ல சூழ்நிலையும் உருவாகலாம்.
பொருளுலகில் வாழும் மனிதன்
அருளொளி அளிக்கும் மெய்ஞ்ஞானமாம்
இக்கொடையை ஏற்றுக்கொண்டால்
மரணமிலாப் பெருவாழ்வில்
அவன் நிலைபெறுவது திண்ணம்.
மனிதன்
அருளொளி வழங்கும் மெய்ஞ்ஞானமாம்
இக்கொடையை ஏற்றுக் கொள்வானா?
அதற்கான சூழ்நிலை வெகு வேகமாக
இஞ்ஞான யுகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
Tuesday, February 26, 2008
'க' சொல்லும் மெய்ஞ்ஞானமும் மதநல்லிணக்கமும்
நானே
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாய்
இருக்கிறேன்.
குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் இந்த மெஞ்ஞான சூத்திரம், மேற்காட்டப்பட்டுள்ள "க" என்ற உயிர்மெய்யெழுத்தின் சமன்பாட்டில் உள்ளடங்கியிருக்கிறது. மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.
க நானே (உயிர்மெய் ஒருமை, திரித்துவ ஒருமை)
க் மெய், சத்தியம் (பரமபிதா, பரப்பிரம்மண், அல்லா)
+ வழி, உயிராம் ஜீவனும், மெய்யாம் சத்தியமும் ஒன்றும் வழி (கிறிஸ்து, சத்குரு, ரசூல் அல்லது நபிகள்)
அ உயிர், ஜீவன் (பரிசுத்த ஆவி, ஆதிசக்தி, புனித ரூ)
= இருக்கிறேன்
உயிராய் மெய்யாய் அவையொன்றும் வழியாய்
உயிர்மெய் என்றுளேன் நானே
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தைப் பாருங்க அதுக்கு
கத்துக் கொடுத்தது யாருங்க
(திரைப்பாடல் வரிகள்)
கா கா கா என்று தொண்டை கிழியக் கத்தி மேற்சொன்ன மெய்ஞ்ஞானத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறதோ காக்காக் கூட்டம். "க" என்ற எழுத்து தமிழில் எண் ஓன்றைக் குறிக்கப் பயன் படும் வல்லெழுத்து தானே! இந்த ஒருமையை வலியுறுத்தும் காக்காக் குரு வாழ்க! காக்காக் குரு தீட்சை கற்போம்! ஒருமையில் நிற்போம்! குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் இந்த மெஞ்ஞான சூத்திரத்தின் பொருள் உணர்வோம்!
Monday, February 25, 2008
மரணமிலாப் பெருவாழ்வின் மெய்ஞ்ஞான சூத்திரம்
நான் இருக்கிறேன்
என்ற அருஉருவாம் அருட்பெருஞ்ஜோதியில்
ஆள் என்ற உருவம் ஆழ ஆழ ஆழ
அருட்பெருஞ்ஜோதியால் துரிதப்படுத்தப்பட்டு
அந்த ஆள்
அருட்பெருஞ்ஜோதியின் எண்ணற்ற அடுக்கின்
சொல்லொணா மடங்காகி(arutperunjothi to the power of infinity multiplied by the person)
ஆளாம் உருவம்
நானே
என்ற அருவாம் தனிபெருங்கருணையில் ஒன்றி மறையும்
இதுவே மரணமிலாப் பெருவாழ்வு
Sunday, February 24, 2008
கவனம்!
ஒருமை நழுவிய கணமே
மரணம்
ஒருமையே உயிர்நிலை
ஒருமை நழுவிய கணமே
வெறும் என்புதோற் கூடு
ஒருமையே சிவம்
ஒருமை நழுவிய கணமே
நாறுஞ் சவம்
ஒருமையே இருதயம்
ஒருமை நழுவிய கணமே
வெறும் இயந்திரம்
ஒருமையே உயிர்மெய்
ஒருமை நழுவிய கணமே
மாமிசப் பிண்டம்
ஒருமையே அருளடக்கம்
ஒருமை நழுவிய கணமே
அடங்கா மிருகம்
ஒருமையே தலை
ஒருமை நழுவிய கணமே
வீழும் முண்டம்
ஒருமையே பெருந்தவம்
ஒருமை நழுவிய கணமே
அவமே அவம்
ஒருமையே மெய்ப்பொருள்விளக்கம்
ஒருமை நழுவிய கணமே
பொய்யிருட்கலக்கம்
ஒருமையே பூரணம்
ஒருமை நழுவிய கணமே
பூஜ்ஜியம்
நாயகனின் பேருபதேசம்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
அதி கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையே
ஏழாம் அறிவின் தீர்க்க தரிசனம்
"சத் தர்ஷனம்" என்னும்
துகளளவும் துரிசற்ற தூய நிலையை
எங்கும் எதிலும் எப்போதும்
காணவும் அறியவும் உணரவும் வல்ல
தூய நோக்கு
அதி அதி கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
நள்ளிரவில்
பட்டப்பகல் வெளிச்சமாய்ச்
"சுளீர்" என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்தைகளால்
"பளார்" "பளார்" "பளார்" என்று
இடைவிடாது
என்னை அறையும்
நீவிர் யாரோ?
பெயர் சொன்னால்
அப்பெயரால் நீ என்னை அழைக்க
அப்பெயரை நீ பூசை செய்ய
அப்பெயரை நீ உருவகித்துப்
படத்தில் மாட்டிக் கும்பிட
அப்பெயரின் பேரில்
மதமொன்றை நிறுவிட
இவ்வாறாக
ஆறறிவு நிலையில்
பற்பல தந்திரங்கள் செய்யத் தெரிந்த
நீ
அத்தந்திரங்களால்
ஒரு காலும்
என் தாள்களின் தூசுகளைக் கூடத்
தொட முடியாது
கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
இருந்தாலும்
ஒரு பொருள் பொதிந்த பெயரை
அன்பின் மிகுதியால்
உனக்குச் சொல்லுகிறேன்
"நாயகன்"
"வாலறிவன்" என்று
வள்ளுவர் சொல்கிறாரே
அதுவே பெயரின் பொருளோ?
ஆம், அதுவே
ஒன்று முதல் ஐந்து வரை
ஆறறிவு ஈறாக
பிரபஞ்ச உயிர்த்திரள்
ஆறின் ஓருமையாம்
ஏழில் நிற்க
மூளையின் மத்தியில்
தீப்பிழம்பாய்த் தோன்றும்
"வாலறிவன்"
அதாவது தூய நோக்கை உடையவன்
எனப் பொருள்படும்
"நாயகன்"
ஆனாலும்
என் பிடி
இவ்வார்த்தைகளில் அறவே இல்லை
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையே
என்னைப் பிடிக்கும்
ஒரே வழி
கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
இவையும் வார்த்தைகள் தானே.
இவ்வார்த்தைகள் சுட்டும்
ஒருமைப் பேருணர்வை
உனக்கு நன்றாக உறைக்க வேண்டும்
உன் சுரணையில் அது நன்றாக ஏற வேண்டும்
என்பதற்காகவே
"சுளீர்" என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்தைகளால்
"பளார்" "பளார்" "பளார்" என்று
இடைவிடாது உன்னை அறைகிறேன்.
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள்
அதி கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
"வாலறிவன் நற்றாள் தொழாரெனின்"
என்ற வள்ளுவர் குறளுக்கும்
உமது இவ்வாக்குக்கும்
தொடர்பு உண்டோ?
உண்டு.
"கற்றாதனால் ஆயபயன் என்கொல்?"
அஞ்ஞானக் கல்வியால்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நிற்க வேண்டிய
உன் கவனம் நழுவி
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
வாலறிவன் தாள்களை மறந்து
ஏழாம் அறிவை
நீ
விட்டு விட்ட
ஞானத் திமிரைச் சாடும்
அவரது மெய்ஞ்ஞானப் புலம்பல்
எப்போதும் ஒருமையுணர்வில்
நிற்க அதி கவனமாயிரு
அவ்வொருமை
ஒரு கணம் போயினும்
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
"வால்" என்பதன் பொருள் யாதோ?
ஒன்று முதல்
ஆறு ஈறாக
ஆறாதார பிரபஞ்ச உயிர்த்திரள்
"நாய்" என்னும் நிராதார மேனிலை
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் ஒன்றி நிற்கும் தூய்மை
"வள்ளல்" யாரோ?
என் பெயரே.
ஆனால் எப்பெயரிலோ
"வால்" மற்றும் "நாய்" போன்ற
வார்த்தைகளிலோ
என் பிடி இல்லை.
கணப்போதும் நீங்காத ஒருமையுணர்வே
என்னைப் பிடிக்கும் ஒரே வழி
எனவே கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
சில கேள்விகளை
நான் கேட்கும் போது
மீண்டும் மீண்டும் மீண்டும்
இப்பதிலையே தருகிறீரே!
கவனம்! அதி கவனம்!
அக்கேள்விகளைக் கேட்கும் போது
ஒரு கணமேனும்
உன் கவனம் ஒருமையிலிருந்து நழுவும்
பேரபாயமுள்ளதை எச்சரிக்கவே
இப்பதில்
அதி கவனம்!
தலை முதல் கால் வரை
உன் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
இவ்வொருமையுணர்வு ஊன்றி நிலைக்கும் வரை
"சுளீர்" என்று இச்சுடும் பதில்
"பளார்" "பளார்" "பளார்" என்று
உன்னை அறைந்து கொண்டே இருக்கும்
நாயகரே!
நனி மிக நன்றி
ஒருமை விகுதியை எடுத்துப்
பன்மை விகுதியைப் போட்டு
என்னை விளிக்கும்
மற்றும்
"நனி மிக" என்று நன்றியோடு கூட்டி
நீ
செய்யும் ஆறறிவுத் தந்திரங்கள்
எதுவுமே என்னிடம் பலிக்காது
இருந்தாலும்
என் அன்பு மகனே!
நானுனக்கு நன்றி சொல்வேன்.
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
என் தாள்களை உணராது
நீ
அழுது புலம்பி அரற்றி
வாய் கிழியப் பேசி
தாள் கிழிய எழுதி
நோய்வாய்ப்பட்டு
புத்தி தடுமாறிப் பித்தனாகி
எழ முடியாமல் விழுந்து கிடந்து
எழுந்ததும் தற்கொலைக்குத் துணிந்து
அதைச் செய்யாமல் விட்டு
பின் எக்கொலைக்குந் துணிந்து
அதையும் செய்யாமல் விட்டு
பின் தெளிந்து
நானே, நான். என்னும்
உன் பழைய தந்திரம் மீட்டு
இவ்வாறாக
நீ
செய்த ஆறறிவுத் தந்திரங்கள்
அனைத்தையும் அறிவேன்.
இவற்றை மீறி
மனித நேய ஒருமையென்றும்
ஆன்ம நேய ஒருமையென்றும்
இன்னுந் தாண்டி
நான் சொல்லும்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையின் மீது
உனக்கிருக்கும்
உறுதியையும் காதலையும் பற்றையும்
நன்றாக அறிகிறேன்.
எனவே
நீ
பழுத்திருக்கும் இக்கணத்தில்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையாய்
உன் ஏழாம் அறிவாய்
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
என் தாள்களை
உனக்கு உணர்த்துகிறேன்
உன்னைப் போன்றே
பிரபஞ்ச உயிர்த்திரள் ஒவ்வொன்றுக்கும்
உணர்த்துகிறேன்
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
நானே. நான். என்பதன்
முழுப்பொருள் விளக்கம்
மெய்ப்பொருள் விளக்கம்
இதுவே
நாய்க்குரு தீட்சையின் சாராம்சமும்
இதுவே
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருமையுணர்வொன்றே
நீ
என்னைப் பிடிக்கும் ஒரே வழி
எனவே
அதி கவனமாயிரு
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்
நீவிர் வலியுறுத்தும் ஒருமையை
வள்ளுவரும் வலியுறுத்தியிருக்கிறாரே!
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து"
ஆம்
ஆமை = ஆம்+ஐ
தனக்குள் ஒளிரும்
ஐ என்ற வாலறிவனாம் தலைவனை
ஆம், ஐ அவனே
என்று அறிய முடிந்த
ஆறறிவுள்ள மனிதனைச் சுட்டுகிறது.
ஐந்தடக்கல்
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த்திரளை
அவற்றுக்கெல்லாம் ஐ ஆம் தலைவன்
மனிதனவன் தன்னில் அடங்கியிருக்கும்
உண்மை நிலையை உணர்தல்.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளிலும்
ஒளிந்திருக்கும் 'ஐ'அறிவிற்கு
(ஐ ஆம் தலைவனை அறிவதற்கு)
ஆறறிவுள்ள மனிதனே திறவு கோல்.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்தும்
'ஐ'அறிவுள்ள அவனுக்குள் அடக்கம்.
இதை முழுவதுமாய் உணர்ந்து
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்தையும்
தன்னுயிராய் அன்போடு அரவணைத்தலே
ஆறறிவின் நோக்கம்
அதன் உச்சம்.
அவ்வுச்சத்தில்
எழுமையாய் எழும் ஐயே
எல்லாந் தழுவியமுழுமையாம் ஒருமை.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்துக்கும்
'ஐ'அறிவுள்ள
ஆறறிவு மனிதனே ஐ ஆம் தலைவன்.
ஒன்று முதல் ஐந்து வரை
ஆறு ஈறாக
உயிர்த்திரள் அனைத்திற்கும்
ஆறறிவின் நோக்கத்தை முழுதுணர்ந்த
ஆறறிவின் உச்சத்தில்
அவனுக்குள் எழும் 'ஐ' யாம்(எழுமையாம்)
ஒரும் 'ஐ' யாம்(ஒருமையாம்)
எல்லாந் தழுவிய
ஒருமையே தலைவன்.
ஆக
"நாயகன்"
அவன் பழுக்கும் ஒரு கணத்தில்
அவனுக்குள்ளிருந்தே எழும்
'ஐ' யாம்(எழுமையாம்) உட்போதகரே!
என் புரிதல் சரியா?
நனி மிகச் சரியே!
"நனி மிக" என்ற
ஆறறிவுத் தந்திரத்தை
நீவிரும் கையாள்வதோ?
ஒருமையில்
ஒருமையையே
உயர் நோக்கமாய்க் கொண்டு
கையாளப்படும்
ஆறறிவுத் தந்திரங்கள்
நனி மிக நன்றே!
ஏனென்றால்
அவற்றால் என் குடும்பமாம்
ஒன்று முதல் ஆறறிவு வரையிலான உயிர்த்திரள்
நனி மிகப் பயன் பெறும்.
நீயும்
"நாய்க்குரு தீட்சை"
என்று நாய் படாத பாடு பட்டு
கையாண்ட ஆறறிவுத் தந்திரமும்
ஒருமையை வலியுறுத்தும் நோக்கத்திற்கேயன்றி
வேறெந்த குறுகிய நோக்கத்திற்காகவும் அல்ல
என்று நானறிவேன்.
இந்நோக்கம் உனக்கும் தெரிந்திருந்தும்
அதை நனி மிகத் தெளிவாக
"நாய்க்குரு தீட்சையின் நோக்கம்"
என்று நீ வெளிப்படுத்தவுஞ் செய்தாய்.
நோக்கம் எனக்குத் தான் தெரிந்திருக்கிறதே
அதை எதற்கு வெளிப்படுத்த வேண்டும்
என்ற ஞானத் திமிரில்
நீ இருந்திருந்தால்
நீ பழுத்திருக்க மாட்டாய்.
"நாயகனின் பேருபதேசம்"
உன் வழியாக
வெளி வந்திருக்காது.
எனவே
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருமையுணர்வொன்றே
நீ என்னைப் பிடிக்கும் ஒரே வழி
"ஊன்றியே"
என்றொரு புது வார்த்தையை
இப்போது சேர்த்திருக்கிறீரே!
எழுமையைக் குறிக்க
ஏழு வார்த்தைகள் இருக்கட்டும்
என்ற புதுத் தந்திரமா?
ஆம்
அதை விட முக்கியமாக
இவ்வார்த்தைகளில் ஆழ ஊன்றிப்
பொருளுணர்ந்து
பொருளாம் ஒருமையெனும்
அம்மெய்க்குள் ஆழ ஊன்றியே
உறுதியுடன் நீ நிற்க வேண்டும்
என்பதை வலியுறுத்தவே
இப்புதுத் தந்திரம்.
மரம் மண்ணுக்குள் வேரூன்றி
எவ்வாறு உறுதியுடன் நிற்கிறதோ
அவ்வாறே
மனிதனாம் நீயும் ஒருமைக்குள் வேரூன்றி
உறுதியுடன் நிற்க வேண்டும்.
கவனம்!
ஒருமையே வாழ்வு
ஒருமை நழுவிய கணமே
மரணம்
அச்சுறுத்துகிறீரோ?
'ஐ' யாம் நானிருக்க பயமேன்?
மெய்யாம் ஒருமையில் நீ ஊன்றியே நிற்கும் கணங்கள்
உன் உயிர்ச்சக்தியைக் கூட்டுகின்றன.
மெய்யாம் ஒருமையிலிருந்து நீ நழுவும் கணங்கள்
உன் உயிர்ச்சக்தியைக் கழிக்கின்றன.
இப்பேருண்மையை
நனி மிகத் தெளிவாக வலியுறுத்தவே
இச்சுடும் வார்த்தைகள்.
உன்னை அச்சுறுத்துவது
என் நோக்கமல்ல.
உன்னை அறிவுறுத்துவதே
என் ஒரே நோக்கம்.
எனவே
உயிர்ச்சக்தி கழியும் கணங்களைக் கழித்து
உயிர்ச்சக்தி கூடும் கணங்களைக் கூட்டி
மெய்யாம் ஒருமையில் ஊன்றியே நிற்கும்
உன் முனைப்பும்
தளராத முயற்சியும்
உன்னை
எப்போதும் அவ்வொருமையில் ஊன்றியே நிற்கும்
மரணமிலாப் பெருவாழ்வை நோக்கிப்
படிப்படியாக முன்னேற்றும்.
மெய்யாம் ஒருமையில் எப்போதும் ஊன்றியே நிற்கும்
இவ்வொரே வழியினாலன்றி
மரணமிலாப் பெருவாழ்வை
நீ வேறெவ்வாறும் அடைய முடியாது.
ஒருமையுணர்வொன்றே
என்னையும்
என் வரமான மரணமிலாப் பெருவாழ்வையும்
நீ பிடிக்கும் ஒரே வழி.
இதை ஐயமேதுமின்றி
இதோ இங்கேயே இப்போதே
அறி!
கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
