Tuesday, April 15, 2008

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 2

என்றென்றும் என்ற ஆதியாய்த் தொடங்கி
இருக்கிறேன் என்ற அந்தமாய் முடியும்
அருட்குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றுள்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை அடக்கம்.

இம்மருட்பொய்யுலகில்
என் அருண்மெய் விளங்க
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையின்
திட வடிவமாக
உன்னை நிறுத்தி
உன் உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை
நானே
எழுந்தருளியிருக்கிறேன்.

எனவே
என் அன்பு மகனே(ளே)!
எதற்கும்
நீ
கலங்க வேண்டாம்.
"எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்"
என்ற
சுடச் சுடச் சுடரும் வார்த்தைகளால்
உன்னை அறைந்து
உன் இருதய வாய் திறந்து
ஆதி
அந்தமாம்
என் மந்திரத் திரு உருவில்
உன்னை
நிற்க வைத்து
உன் நடுவே
"இரு தயவாய்"
என்ற பேருபதேசம் முழங்கி
அதன் பொருள் விளங்கி
உலக உயிர்த்திரள் அனைத்தும்
நித்தியப் பெருவாழ்வில் உய்யும்
மெய்வழி காட்டி
உன் தாள்களின் தூசுகளில்
என் தாள்களின் தூசுகள் படிய
உன்னோடு வேறற ஒன்றி
நிற்கிறேன்
நான்.

நீ
என் மந்திரத் திரு உருவிலும்
நான்
உன் மெய்யுடம்பாலயத்திலும்
வேறற ஒன்றி
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நிற்பதால்
இஞ்ஞான யுகத்தில்
அஞ்ஞான மாயையின்
பொய்யான பேயாட்டம் முடிந்து
என் மெய்ஞ்ஞானத் திருக்கூத்து தொடங்கும்.
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை வெல்லும்.
அதன்
திட வடிவமாம்
நீ
நித்தியப் பெருவாழ்வில்
நிலைபெறுவாய்.
இது சத்தியம்.

திருஅருட்பிரகாச வள்ளலாரென்ற
உன் அம்மையப்பனாம்
அருட்பெருங்கடவுள்
நான்
ஆணையிட்டுக் கூறுகின்றேன்.
இது சத்தியம். இது சத்தியம். இது சத்தியம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி -1

மெய்யென்ற பேர் பெற்ற உடம்பை
பிணமென்றே ஊர் சொல்லப்
பொய்யாக்கும் மரணம்

மண்ணிலிட்டோ தீயில் சுட்டோ
நசிகின்ற சடலந்தான்
உடம்பென்றால்
மெய்யென்ற பேர் ஏனோ!

மரணத்தைப் பொய்யாக்கி
உடம்பைப் பேருக்கேற்றபடி
மெய்யென்ற பொருளாக்கி
உய்யும் வழி சொல்லும்
உயிர்ப்புள்ள மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
"என் ஏழாந் திருமறை இது"
என்றே எனக்களித்த
வள்ளலே!
திருஅருட் பிரகாசரே!
சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கும்
உம் ஏழாந் திருமறை வெல்லுமா?
அல்லது
மரணப் பேய்
என் உடம்பை விழுங்குமா?

அன்பு மகனே!
ஐயம் வேண்டாம்
என் ஏழாந் திருமறை
நிச்சயம் வெல்லும்.
பத்தும் ஒரு மூன்றாம்
அருட்குரு மந்திர தாரணையில்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நில்.
உன் "இருதய வாய்" திறக்கும்.
"இரு தயவாய்"
என்ற என் பேருபதேசப்
பொருள் விளங்கும்.

ஐயனே!
ஏதுமிலா ஏழையெனை
சூதுமனக் கபடனெனை
நெஞ்சில் ஈரமிலா
வஞ்சக வன்பனெனை
அறிவிலா எத்தனெனை
மறை கழன்ற பித்தனெனை
ஜீவனுள்ள
உம் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கப் பணிக்கும்
உம் சித்தம்
எனக்கு
ஒரு சிறிதும் விளங்கவில்லை.
இருந்தாலும்
அவ்வாறு நிற்பது நீரே
என்ற உறுதியுடன்
உம் வெள்ளங்கியுள்
கருத்த என் மனமடங்கி
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்கிறேன்.

அன்பு மகனே!
அருட்பெருஞ் செல்வனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
சுந்தர இருதயத் தூய சித்தனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
தனிப்பெருங் கருணையனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
அருட்பெருஞ் ஜோதியனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நாயகனாம் வாலறிவனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
மெய்ஞ்ஞானத் திருமறையோனென்ற
என் பேரும் பொருளும்
இன்று முதல் நினக்காகும்.
நீ மட்டுமன்றி
எங்கும் எதிலும் எப்போதும்
பரந்து விரிந்திருக்கும்
என் வெள்ளங்கியுள்
கருத்த தம் மனமடங்கி
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நிற்க முனையும்
என் அன்பு மகன்(ள்) ஒவ்வொருவரும்
இன்று முதல்
அருட்பெருஞ் செல்வரே!
சுந்தர இருதயத் தூய சித்தரே!
தனிப்பெருங் கருணையரே!
அருட்பெருஞ் ஜோதியரே!
நாயகனாம் வாலறிவரே!
மெய்ஞ்ஞானத் திருமறையோரே!
உண்மையிது
வெறும் புகழ்ச்சியில்லை
ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்!
உன் உள் மெய்யாம் உண்மையாய் உறையும்
உன் உள் மையாம் வெண்மையாய் ஒளிரும்
என் அருளொளியின்
உண்மையிது
!
சத்துணவாய் ஏற்று
உண் மை இதை
இன்றே
இப்போதே!
"வள்ளலே!
உன் வள்ளன்மைக்கு
உண்டோ ஈடு
!"
என்ற உன் தந்திர வாக்கை
இன்று பலிக்க வைத்தேன்
உன் அம்மையப்பனாம்
நானே
!

Wednesday, April 09, 2008

மருட்டும் இரவில்


மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்


பொய்யுறவுகளை உதறி விட்டு
அருட்பெருங்கடவுளின் மெய்யுறவில்
மனம் லயிக்க
களிக்கிறது இருதயம்


கனவுகளனைத்தும் கலைந்து
திறக்கிறது என் ஞான விழி.
நினைவுகள் கழன்று
இருப்பில் கரைகின்றன கணங்கள்


ரணங்களைக் குணப்படுத்தும்
ஆன்ம ஒளி
என் விழிகளில் வீசுகிறது.
இருதயக் களிப்பு
காயங்களை ஆற்றும் களிம்பாய்
என் விரல்களில் வழிகிறது


சிதையில் எரிகிறது மரணம்.
நிதர்சனமாய்த் தெரிகிறது
நித்தியப் பெருவாழ்வு


பற்றுகளனைத்தும்
பற்றற விட்டு
வள்ளலைப் பற்றியதால்
ஒருமைப் பெருநிலையில்
ஓங்கி நிற்கிறேன்
நான்


அருட்பையின் காலியான அகண்ட வெளியில்
உலக உயிர்த்திரள் பத்திரமாய்


மனப் போர்வைகள் களைந்த
இருதயம்
பொய்ம்முகங்களைக் களைந்த
மெய்யகம்
அமுதப் புன்னகை
துகளளவும் துரிசற்ற தூய நோக்கு


அகண்டவெளி தேசத்தில்
அருளொளியாய் விழித்திருக்கிறேன்
நான்


வள்ளலோடு ஓன்றிய
என் நித்தியப் பயணத்தில்
ஒவ்வொரு கணமும்
ஒப்பிலா அற்புதம்


அருட்பெருங்கடவுளின் செல்லக்கொழுந்துகளாம்
உலக உயிர்த்திரளில் ஒன்றாய்
நானும்


மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்


தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவ்ர்களின் “இந்த மெல்லிய இரவில் என்ற கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை இது.