Thursday, February 14, 2008

மரணமிலாப் பெருவாழ்வு

உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டமே, இவற்றின் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

கடவுள் என்று சொல்லப்படுகின்ற அருவமான ஒரே மெய்ப்பொருளிலிருந்தே பல்வேறு உருவத் தொகுதிகளான அனைத்தும் உருவாகின்றன. இந்த அருவ மெய்ப்பொருளானது அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பாய் இருக்கிறது. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன்னுள் அனுமதிக்கும் சுத்த வெளியே அருட்தந்தை. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அருளொளியால் அரவணைக்கும் ஜோதி வெளியே அருட்தாய். எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அறிவொளியால் ஒளிர்விக்கும் ஞான வெளியே அருட்குரு.

சுத்த வெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால், ஜோதி வெளி சுத்த வெளியெங்கும்
உருவாகிறது. இந்த ஜோதி வெளியானது, சுத்த வெளியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் பேரொளிக் கோளமாக அதிவேகமாக விரிந்து கொண்டே இருக்கிறது. இந்த அதிவேகமான விரிதலுக்கும், சுத்த வெளியின் அழுத்தத்திற்கும் இடயே இடைவிடாது நிகழ்ந்து கொண்டே இருக்கும் புணர்தலால், சுத்த வெளியெங்கும் ஜோதிவெளியெங்கும் உருவாவதே ஞான வெளி. இஞ்ஞான வெளியானது, அருட்தாயின் அருட்தந்தையின் தலைமகனாகத் தலைமகளாகத் தன்னை அறிகிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கவே முடியாது பின்னிப் பிணைந்திருக்கும் இம்மூவரின் ஒருமையே, கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருள்.

உடம்பு, மனம், மூச்சு இவற்றின் ஒருமையாம் ஓர் உருவத் தொகுதியாய் ஜீவிக்கும் நீ, கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருளின் ஓர் உன்னத தெய்வீக வடிவமே. அருட்தாயே உன் உடம்பாகவும், அருட்குருவே உன் மனமாகவும், அருட்தந்தையே உன் மூச்சாகவும், இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பே உருவத் தொகுதியான உன் ஜீவனாகவும் விளங்குகின்றனர். அருவமாய் விளங்கும் இவர்கள், தத்தம் உச்ச அதிர்வுகளைக் குறைத்துக் கொண்டே நீயாகவும், மற்றெல்லா உயிரினங்களாகவும், பொருட்களாகவும் உருவாகின்றனர்.

இப்பேருண்மையை எந்தவொரு ஐயமுமின்றி முழுமையாக நீ உணரும்போது, உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு, இக்கண்ணோட்டம் விளைவிக்கும் இவற்றின் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு, மரணமிலாப் பெருவாழ்வில் நிலைபெறுவாய்.

No comments: