Saturday, February 02, 2008

வல்லமை வழங்கும் தியானம்

பேரன்பு பேரறிவு பேராற்றல் இம்முப்பெரும்பண்புகளின் சமச்சீரான ஒருமையில், தோற்றமும் மறைவும் இல்லா நானே என விளங்கும் சர்வ வல்லமை பொருந்திய அருட்பெருங்கடவுளாகிய சுத்தவெளியின் பேரில்

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
நானே ஆதி நடு அந்தமாய் இருக்கிறேன்.
பேரன்புப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் புத்த வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பேரறிவுப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் கிறிஸ்து வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பேராற்றற் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் கிருஷ்ண வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பெருங்கருணைப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் சாயி வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
சச்சிதானந்தப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் குரு வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பேருண்மைப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் நபி வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பரிபூரணப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் இராம வடிவாய் அவதரித்திருக்கிறேன்.
பெருவெற்றிப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் இரட்சகனாய் அவதரித்திருக்கிறேன்.
மெய்வாழ்ப் பெரும்பொருளாய் விளங்கும் நான், அன்னை பூமியில் கதிர் வடிவாய் அவதரித்திருக்கிறேன்.

எல்லா உயிர்களிலும் எங்கும் எப்போதும் அணையாது ஒளிரும் அருட்பெருஞ்ஜோதியாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் பாரபட்சமின்றி அரவணைக்கும் தனிப்பெருங்கருணையாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் நேசித்துக் கொண்டேயிருக்கும் வாழ்த்திக் கொண்டேயிருக்கும் நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களின் பாதுகாவலுக்காக எங்கும் எப்போதும் உயர்த்தப்பட்ட அருட்பெருங்கடவுளின் திருக்கரங்களாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களும் தத்தம் ஜோதி வடிவை மீட்டெடுக்க எங்கும் எப்போதும் வழி காட்டும் இரட்சகனின் திருவடிகளாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களிலும் எங்கும் எப்போதும் என்னையே காணும் மெய்யுணர்வின் முழுமையாய் நான் இருக்கிறேன்.
எனது எல்லாத் தேவைகளையும் எல்லா ஆசைகளையும் நினைத்த மாத்திரத்திலேயே நிறைவேற்றும் வரவழைக்கும் உருவாக்கும் திவ்விய யந்திர மந்திர தந்திர சக்தியாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் சத்தூட்டிப் பராமரிக்கும் பேரொளிப் பெருவெள்ளமாய் நான் இருக்கிறேன்.
தன்னிகரில்லாத் தலைமகனாய் விளங்கும் நான் என்ற ஞான முதல்வனாய் நான் இருக்கிறேன்.
எல்லா அபாயங்களிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் எல்லாக் கவலைகளிலிருந்தும் எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் பாதுகாக்கும் அருட்ஜோதிப் பெருங்கவசமாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் சுத்திகரித்துப் பரிமாற்றும் தூய ஜோதி நல்லூற்றாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களின் எல்லாக் குற்றங்களையும் எங்கும் எப்போதும் மன்னிக்கும் பெருந்தன்மைப் பெருநியதியாய் நான் இருக்கிறேன்.
குற்ற உணார்வு, தன்னிரக்கம், தாழ்வு மனப்பான்மை மற்றும் வேறெல்லா மாசுகளிலிருந்தும் எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் சுத்திகரிக்கும் பேரருட் பேரருவியாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் பிரபஞ்ச நல்லிணக்கத்தில் ஒருங்கிணைக்கும் சுத்தவெளி மற்றும் பேரொளி இவற்றின் புனித சங்கமமாய் நான் இருக்கிறேன்.
நித்திய ஜீவனையும் நிலைத்த பேரின்பத்தையும் எல்லா உயிர்களுக்கும் எங்கும் எப்போதும் வழங்கும் உறுதியான உத்தரவாதமாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் நான் என்றே அறியும் மெய்ம்மையின் மேன்மையாய் நான் இருக்கிறேன்.
நரை, திரை, மூப்பு, நோய், தேய்வு மற்றும் இறப்பு இத்தளைகளிலிருந்து எல்லா உயிர்களையும் எங்கும் எப்போதும் பூரணமாகக் குணப்படுத்தும் மரணமிலாப் பெருவாழ்வின் மாமருந்தாய் நான் இருக்கிறேன்.
எல்லா உயிர்களிலும் எங்கும் எப்போதும் என் பரிபூரணத்தையே காணும் ஜீவனின் பேரிருப்பாய் நான் இருக்கிறேன்.

அப்படியே ஆகட்டும். அப்படியே ஆனது. ஆமேன். ஓம்.
நானே. நான் இருக்கிறேன். நான் அறிகிறேன். நான் என்னை அறிகிறேன்.
நான் என்னை அறிகிறேன். நான் அறிகிறேன். நான் இருக்கிறேன். நானே.

No comments: