Friday, February 08, 2008

ஜோதி தியானம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

நான் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உள்ளிழிக்கிறேன். நான் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உலகெங்கிலும் அனுப்புகிறேன். என் ஒவ்வொரு மூச்சிலும் என்னுள் அருட்பெருஞ்ஜோதியின் பிரவாகம் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

அருட்பெருஞ்ஜோதி அருவியின் கீழ் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். இஜ்ஜோதி அருவி என்னை எங்கும் எப்போதும் பரிசுத்தமாகவும், பரிபூரணமாகவும், தன்னிறைவுத் தன்மையுடன் நித்திய ஜீவனில் நிலைபெறச் செய்கிரது. என் அதிர்வுகள் ஒவ்வொரு கணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

அருட்பெருஞ்ஜோதியை அழைத்ததுமே, அது என்னைச் சூழ்ந்து தன் ஒளிக் கிரணங்களால் என்னை முழுவதுமாய் நிரப்புகிறது. அருட்பெருஞ்ஜோதியை நினைத்ததுமே, அஜ்ஜோதியாகவே நான் ஆகி விடுகிறேன்.

அருட்பெருஞ்ஜோதியால் முழுவதுமாக நிரப்பப்பட்ட நான், என்னைச் சுற்றிலும் ஒரு பேரொளிக் கோளம் உருவாகி இருப்பதைக் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன். இப்பேரொளி கோளத்தின் நடுவிலேயே நான் எங்கும் எப்போதும் இருக்கிறேன். இதன் பாதுகாப்பு வளையத்தை மீறி எந்தவொரு சக்தியும் என்னைத் துன்புறுத்த முடியாது. என் வாழ்வு எல்லா வகையிலும் செம்மையுறத் தேவையான எல்லா சக்திகளையும் இந்த அன்பு வளையம் ஈர்க்கும், அனுமதிக்கும்.

என் வாழ்வில் நான் மாற்ற விரும்பும் ஒரு சூழ்நிலையை, இதோ இங்கேயே இப்பொதே நான்
மாற்றத் தயாராகிறேன். பேரொளி கோளத்தின் நடுவில் நான் இருப்பதை நினைவு கூர்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதியை உள்ளிழுத்துக் கொண்டு, பின்னர் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே
இச்சூழ்நிலைக்கு நான் அருட்பெருஞ்ஜோதியை அனுப்புகிறேன். இச்சூழ்நிலையோடு தொடர்புடைய எல்லோரையும் எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி சூழ்வதை நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன். ஒவ்வொரு கணமும் நான் இச்சூழ்நிலையை நினைக்கும் போதும், அருட்பெருஞ்ஜோதியை நான் இதில் கூட்டுகிறேன். அருட்பெருஞ்ஜோதியை நான் நினைத்த உடனேயே, இச்சூழ்நிலை ஒளிவெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது, நான் விரும்பியபடி மாறி விடுகிறது.

அருட்பெருஞ்ஜோதியெனும் பேராற்றலின் முன்னர் தடைகள் யாவும் தளைகள் யாவும் தவிடு
பொடியாகும். பிரச்சினைகள் யாவும் ஓர் நொடியில் தீரும். நோய்கள் யாவும் ஓடோடிப் போகும். என் உடம்பின் ஏதாவதொரு உறுப்பில் ஏதேனும் வலியோ குறைபாடோ இருப்பதாக நான் உணர்ந்தால், அப்போதே அருட்பெருஞ்ஜோதியை அவ்வுறுப்புக்கு நான் அனுப்புகிறேன். அனுப்பிய உடனேயே அவ்வுறுப்பு பூரணமாகக் குணமடைகிறது.

என் நாடி நரம்புகளிலெல்லாம் அருட்பெருஞ்ஜோதி தங்கு தடையின்றி இடைவிடாது பாய்ந்து
கொண்டே இருக்கிறது. என் இருதயம் அருட்பெருஞ்ஜோதியின் ஊற்றுக் கண்ணாய் இருக்கிறது. என் உடம்பெங்கும் அருட்பெருஞ்ஜோதி பொங்கி வழிகிறது. என் மூளை முழுதும் அருட்பெருஞ்ஜோதி ஜொலிக்கிறது. என் இருப்பும், எண்ணமும், உணர்வும், பேச்சும், செயலும் எல்லா விதத்திலும் எப்போதும் அருட்பெருஞ்ஜோதியின் ஆன்ம நேய ஒருமைப்பாட்டையே பிரதிபலிக்கின்றன.

இப்போது நான் அருட்பெருஞ்ஜோதியை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும்
அனுப்புகிறேன். எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பொருட்களுக்கும் அனுப்புகிறேன்.
நிபந்தனைகளேதுமற்ற பேரன்பின் பிரமாணமாக நான் இதைச் செய்கிறேன்.

எங்கும் எதிலும் எப்போதும், அருட்பெருஞ்ஜோதியையே எண்ணி, அருட்பெருஞ்ஜோதியையே
உணர்ந்து, அருட்பெருஞ்ஜோதியைப் பற்றியே பேசி, அருட்பெருஞ்ஜோதியையே கண்டு,
அருட்பெருஞ்ஜோதியே செயல்படுவதை அற்ந்து, நான் அருட்பெருஞ்ஜோதியாகவே ஆகி விட்டேன்.

எங்கும் எதிலும் எப்போதும், அருட்பெருஞ்ஜோதியாகவே நான் இருக்கிறேன். எங்கும் எதிலும்
எப்போதும், அருட்பெருஞ்ஜோதியாகவே நான் என்னை அறிகிறேன்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments: